வீட்டின் மறு பகுதியில் மறைந்து தங்கியிருந்த போராட்ட வீரர்களுக்கான உணவு என்பது, பின்னர் எங்களுக்கு தெரிந்த விவரம்.

அம்மாவே சமைத்து வேலையாள் மூலம் அனுப்புவார்கள். ஆனால். அது போன்ற நாட்களில். அந்த வீட்டுப் பகுதியில் நாங்கள் போய் விளையாடத் தடை இருக்கும். மற்ற நாட்களில், நாங்கள் சின்னப் பிள்ளைகள் ஓடியாடி, ஒளிந்து பிடித்து விளையாடுவது, அந்த பகுதியில் தான்.  

ஆனால் அந்த சுற்றுவட்டாரத்தில் அப்பா செல்வாக்கு உடையவர் என்பதோடு, அவரது படிப்பும் ஆங்கிலமும், ஓரிரு வெள்ளை நண்பர்களுமாக, இது பற்றிய எந்த விதமான சந்தேகமும் ஏற்படாமல் காத்திருக்கக் கூடும் என்று இப்போது தோன்றுகிறது.

 என் அம்மாவைப் பற்றி நான் என்ன எழுதட்டும்?

எல்லாருக்கும் அம்மா என்றால் உயர்வாகத்தான் தெரியும் என்றாலும்...

அம்மாவின் ஆர்வம், அறிவுத்திறன், தைரியம், தன்னம்பிக்கை, எதையும் கண்ட மாத்திரத்தில் கிரகித்துக்கொள்ளும் கற்பூர புத்தி... எங்கள் அப்பாவே சொல்லுவார்கள், உங்களில் யாருமே, அம்மாவின் பத்தில் ஒரு பங்கு கூட இல்லையேடா என்று.   அம்மாவுக்குக் கலை ஆர்வம் அதிகம் உண்டு.  கேள்வி ஞானத்திலேயே, கர்நாடக சந்கிஇடத்தைக் கற்றுக் கொண்டவர்கள். பார்த்துப் பார்த்தே பாரதநாட்டியம் அறிந்தவர்கள். நானும் என் தங்கையும் பள்ளி விழாக்களில் நடனம் ஆடியபோது, அபிநயமும், அடவுகளும், அம்மா கற்றுக் கொடுத்தவை தான். கைத்தட்டல் கிடைக்கும் அவைகளுக்கு. முத்தாய்ப்பான கடைசி நடனம் எங்களதாகவே இருக்கும்.

இத்தனைக்கும் மேல், திருசெந்தூதரின் அன்றைய  சுத்தமான கடற்கரையின் பொன் மணல் பரப்பில், எங்களோடு கிளியாந்தட்டு விளையாடுவார்கள்.

"மரக்கறிப் பதார்த்தங்களைக் கூட, இரண்டாம் முறை கேட்டு வாங்கி சாப்பிடும் அளவு சுவையாக இருக்கிறதே" என்று பாராட்டும் அளவு சுவையாகச் சமைப்பார்கள்.  

இரவில் சாதம் அள்ளித் தந்துகொண்டே, இராமாயணம், மகாபாரதக் கதைகளை அம்மா எங்களுக்குச் சொல்வதுண்டு. நேரில் நடப்பது போல அம்மா சொன்ன விதத்தில் அவர்கள் பெற்ற மக்களுக்கும் அதில் ஈடுபாடு வந்தது. கம்ப இராமாயணம் வில்லிபாரத பாடல்களோடு சொல்வார்கள்.

என் கதைகளினூடே காணப்படும் இதிகாசக் குறிப்புகளின் மூலம், என் அன்னையே.

நான் பிறந்தது பற்றியும் என் அம்மா சொல்லியிருக்கிறார்கள். நான் பிறந்தது, 1938-ம் ஆண்டு, ஜூலை மாதம் பத்தாம் தேதி.

சில பவுர்ணமி நாட்களில், நிலவைச் சுற்றிலும் காம்பஸ் கொண்டு  வரைந்தாற்போல, ஓர் ஒழி வட்டம் தென்படுவது உண்டு. நன்கு கவனித்தால், அந்த ஒளியில், வான வில்லின் ஏழு வண்ணங்களும் தெளிவற்று ஒளிர்வதைக் காணலாம். அதை நிலவுக்குக் கோட்டை கட்டியிருப்பதாக ஊர்பக்கம் சொல்வதுண்டு. அன்று, நான் பிறந்த அந்த நாளில், இன்னமும் அற்புதமாக, நிலவுக்கு அது போன்ற இரு கோட்டைகள்.   

Ramanichandran Life Story3